
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஒரு ஆண்டாக அமைந்தது. அப்பொழுது ஸ்மித் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென்ஆப்பிரிக்கா நாட்டுக்குச் சென்ற ஆஸ்திரேலியா அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கியது.
இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்மித், தொடக்க வீர்ர் பான்கிராஃப்ட், மற்றும் டேவிட் வார்னர் மூன்று பேரும் குற்றவாளிகள் என முடிவானது. இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டை ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இங்கிலாந்தில் நடந்த ஆசஸ் தொடருக்கு திரும்பி வந்த ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் வீரர்களாக மட்டுமே தொடர அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மேலும் தண்டனையாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு இருந்தது. பின்பு அப்படி கேப்டன் பதவி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று வெளியில் இருந்து கருத்துகள் வந்தன. ஆனாலும் கூட ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு டிம் பெயின் கேப்டன் பதவியில் இருந்து விலக பாட் கம்மின்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.