
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. சென்னை, லக்னோ, குஜராத், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ளன.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடகக் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரூ.18 கோடிக்கு தக்கவைப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதவிர்த்து ஆல் ரவுண்டர் ரியான் பராக்கை ரூ.14 கோடிக்கும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலை ரூ.11 கோடிக்கும், ஷிம்ரான் ஹெட்மையரை ரூ.11 கோடிக்கும் தக்கவைத்துள்ள அந்த அணி, அன்கேப்ட் வீரராக சந்தீப் சர்மாவை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மெகா ஏலத்தில் அந்த அணி மிகக்குறைந்த தொகையுடன் பங்கேற்கவுள்ளது.