
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், உடனடியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி நடக்கவுள்ள இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் முதல் 3 போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக செயல்படவுள்ளார். அதன்பின் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய பின், அவர் துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். ஆனால் நட்சத்திர வீரர்களான சாஹல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார்.