
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார்.
இந்நிலையில் மறுப்பக்கம் ரவீந்திர ஜடேஜா தனது சதத்தைப் பதிவுசெய்யும் முனைப்பில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 82ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்துவிட்டு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியே வந்தார். இதனால் மறுபக்கம் இருந்த சர்ஃப்ராஸ் கானும் ஓட முயற்சித்த நிலையில், ஜடேஜா ஓடுவதை விட்டு பின் வாங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத சர்ஃப்ராஸ் கான் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைய முற்பட்டார்.
ஆனால் அதற்குள் மார்க் வுட் நேரடியை பந்தை ஸ்டம்பில் அடிக்க சர்ஃப்ராஸ் கான் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வந்த சர்ஃப்ராஸ் கானை ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சுயநலத்தினால் ரன் அவுட் செய்துவிட்டார் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் இதனை பார்த்துக்கொண்டிருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது கோபத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.