
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பி தொடருக்கான இந்திய அணிக்கு முகமது ஷமி அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தடையில்லா சான்றிதழை பெறும் அளவில் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ளதால் இனி அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்பதும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.