
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 தொடரை என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் ரசிகர்களுக்கு உச்சகட்ட த்ரில்லர் விருந்து படைத்த 3ஆவது போட்டியில் கடுமையாக போராடிய ஆஃப்கானிஸ்தானை இரட்டை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்து கோப்பையை வென்றது மறக்க முடியாததாக அமைந்தது.
மேலும் வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, ரவி பிஸ்னோய் போன்ற இளம் வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அதில் மொத்தம் 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த ஷிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
கடந்த 2019இல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் தோனி தலைமையிலான சென்னை அணியில் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பினார். அதன் காரணமாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 வருடங்கள் கழித்து தேர்வாகி தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் தொடர் நாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்துள்ளார்.