
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையிலும், கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, அப்ரார் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆகா 30 ரன்களையும், முகமது நவாஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 92 ரன்களில் ஆல் அவுட்டானது.