Advertisement

கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!

கேஎல் ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 21, 2023 • 15:09 PM
கேஎல் ராகுல்  இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தொடர் முழுக்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய விதம் இந்திய ரசிகர்களை காயப்படுத்தியதோடு குழப்பத்திலும் வைத்திருக்கிறது.

இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்ததா இல்லையா என்பது குறித்து ரசிகர்களுக்கு பெரிய கேள்வி இருக்கிறது. ரோகித் சர்மா பேட்டிங் செய்யும்பொழுது எளிமையாக தெரிந்தது, அவர் ஆட்டம் இழந்ததும் அப்படியே மாறிவிட்டது. மேலும் ஆஸ்திரேலியா திரும்ப வந்து பேட்டிங் செய்யும்பொழுது பேட்டிங் செய்வது எளிமையாக இருந்தது. 

Trending


இந்தியாவிற்கு இறுதி போட்டியில் கிடைத்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சரியான ஆடுகளம் கிடையாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில் தான் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் விளையாடிய விதம் மிகவும் பொறுமையாக அமைந்தது. இது தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், “கேஎல்.ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது. அவருடைய ஆட்டத்தை அவர் விளையாடி இருக்க வேண்டும். பௌண்டரிகள் வரவில்லை என்றால் நீங்கள் ஸ்ட்ரைக்கை சுழற்றி சிங்கிள் ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.அதுவும் நடக்காமல் நிறைய டாட் பந்துகள் வந்தன. இந்தியா விரைவாக விக்கெட்டுகளை இழக்கும் பொழுது அவர் அதிக பொறுப்பை எடுத்துக் கொண்டார். 

அவருடைய இன்னிங்ஸ் 107 பந்துகளுக்கு 66 ரன்கள் என்று இருந்தது. அது ராகுல் விளையாடும் விதம் கிடையாது. அவர் முழு ஐம்பது ஓவர்களையும் விளையாட நினைத்தார். அவர் அடித்து விளையாட இன்டெண்ட் காட்டி இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் ஸ்கொயர் அதிக தூரமாக இருந்தது. எனவே தரையில் அடிக்க விடாமல் அந்தப் பகுதியில் காற்றில் அடிக்க வைப்பதற்கு ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் செயல்பட்டார்கள். ஆஸ்திரேலியர்கள் இந்தியர்களை விட இந்திய சூழ்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தினார்கள்.

கேஎல்.ராகுல் நன்றாக சிங்கிள் எடுத்து இந்த தொடர் முழுவதும் விளையாடினார். அவர் தனது கால்களை பயன்படுத்தி முன்னே பின்னேவும் சிறப்பாக விளையாடினார். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்களை நம்பாத காரணத்தினால் மிகவும் பொறுமையாக விளையாடிவிட்டார். அவர் 250 ரன்கள் எடுக்க நினைத்தார் ஆனால் எல்லாம் தவறாக போய்விட்டது” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement