
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், மூன்றாவது முறையாக் ஐபிஎல் தொடரில் பட்டம் வென்று அசத்தியது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் தனக்கு காயம் இருப்பதாகும், அதனால் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறியதுடன், ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்த பட்டியளில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இடம்பெறாத நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இடம்பெறவில்லை. மாறாக ரஞ்சிக்கோப்பையில் விளையாடமல் போனதால் தான் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ நடவடிக்கைக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்று விளையாடினார். ஆனாலும் அவரது ஒப்பந்தத்தை பிசிசிஐ புதுபிக்கவில்லை.