
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றிகள் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஷுப்மன் கில் இப்போட்டியில் 93 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படாஇத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் தனது 5000 ரன்களை பூர்த்தி செய்து அசத்தியதுடன், அதிவேகமாக இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.