
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று தொடங்கியது. அதன்படி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்தார். அதன்படி இப்போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ஷுப்மன் கில், ஹசன் மஹ்மூத் வீசிய மோசமான பந்தில் மோசமான ஷாட்டை விளையாடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதிலும் குறிப்பாக அவர் இப்போட்டியில் 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார்.