
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் அபாரமான ஆட்டத்தால், அபார வெற்றியை இந்தியா அடைந்தது.
இந்த போட்டியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. நேற்று காலை வரை இந்திய அணி நிர்வாகம் ஷுப்மன் கில் உடல் நிலையை இந்திய அணி கண்காணித்தது. ஆனால் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஃபிட்னஸை ஷுப்மன் கில் பெற முடியாததால், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதனால் மாற்று தொடக்க வீரராக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டார்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன், மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட்டாகி வெளியேறினார். தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இஷான் கிஷன் சொதப்பி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் ஷுப்மன் கில் விரைந்து குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.