
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.
அதில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்த ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக களமிறங்க உள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிரணி பவுலர்களை பந்தாடிய அவர் 597 ரன்கள் குவித்து முழுமூச்சுடன் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.
குறிப்பாக தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுவதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து சுயநலமின்றி விளையாடும் வீரராக ரோஹித் சர்மாவை தாம் பார்ப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார்.