
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பதும் நிஷங்கா 06 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டி சில்வா - சமரவிக்ரமா இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 24 ரன்கள் எடுத்திருந்த போது தனஞ்செயா டி சில்வா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்காவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் வநிந்து ஹசரங்கா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வர, மறுமுனையில் 25 ரன்களை எடுத்திருந்த சதீரா சமரவிக்ரமா ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இருப்பினும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்த வநிந்து ஹசரங்கா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 32 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 67 ரன்களை எடுத்த நிலையில் ஹசரங்காவின் விக்கெட்டை நவீன் உல் ஹக் கைப்பற்றினார்.