
இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணியானது 2-1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இங்கிலாந்து அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இத்தொடரானது அடித்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகிய நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், மீண்டும் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸாக் கிரௌலியும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.