
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் 30 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 29 ரன்களையும், ஹர்மீத் சிங் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறி ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது முதல் இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை வீசிய இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். அந்தவகையில் அந்த ஓவரின் முதல் பந்தில் கோரி ஆண்டர்சனின் விக்கெட்டை வீழ்த்திய நிலையில் அடுத்த பந்தில் ரன்கள் ஏதுமின்றி டாட் பந்தாக மாறியது.