ஐபிஎல் போட்டிகளைப் போலவே ஒவ்வொரு மாநிலங்களும் ஊள்ளூர் அணிகளை வைத்து டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன. அதில் மிகவும் பிரபலமானது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர். இதுவரை நான்கு சீசன்களைக் கடந்துள்ள இத்தொடரின் ஐந்தாவது சீசன் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் 8 அணிகள் பங்கேற்கும் 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை முதலில் நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது இந்த போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில் ‘2021ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது. கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலை முடித்த பிறகு 9ஆ, தேதி முதல் அணியினர் சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.