
ஐசிசியின் 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகாலமாக நடைபெற உள்ளது. அதற்காக உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வரும் நிலையில், அண்டை நாடான வங்கதேசம் சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 5ஆம் தேதியான நேற்று தொடங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் கேப்டனாக இருக்கும் நட்சத்திர வீரர்கள் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தின் நட்சத்திர வீரரான அவர் கடந்த ஒரு வருடமாகவே கை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயத்தை சந்தித்து பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் விளையாடாத அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான முடிவை எடுத்தார்.
இருப்பினும் முதல் போட்டியில் 13 (21) ரன்கள் மட்டுமே எடுத்த அவர் முழுமையாக குணமடையாமல் விளையாடியது தெளிவாக தெரிந்தது. அதனால் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் அதிருப்தியடைந்ததாக தெரிகிறது. சொல்லப்போனால் நாட்டுக்காக இப்படி பொறுப்பின்றி முழுமையாக விளையாடாதீர்கள் என்ற வகையில் அவர்கள் உள்ளூர் பத்திரிகைகளில் தமீம் இக்பால் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்ததாகவும் தெரிய வருகிறது.