
அடுத்த ஆண்டு 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை இழந்த இந்திய அணியானது இம்முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று நோக்கத்துடன் இளம் வீரர்களை கொண்ட பலமான அணியை கட்டமைத்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் ஆஃப்கானிஸ்தான் தொடர் என வெறும் 6 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணித்தேர்வு எந்த அடிப்படையில் நிகழும்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வில் இருக்கும் வேளையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட அணிதான் விளையாடி வருகிறது.