டிஎன்பிஎல் 2025: கிராண்ட் சோழாஸை வீழ்த்தி சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பில் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

திருநெல்வேலி: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வீரர்கள் பாபா அபாரஜித், விஜய் சங்கர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லிஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 5 ரன்னிலும், மொஹித் ஹரிஹரன் 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் விஜய் சங்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
பின் இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களில் அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர். பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 63 ரன்களைச் சேர்த்திருந்த அபாரஜித்தும், 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 59 ரன்களைச் சேர்த்த கையோடு விஜய் சங்கரும் தங்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. திருச்சி தரப்பில் ஆதிசயராஜ், கனேஷ் மூர்த்தி, சரவண குமார், ஈஸ்வரன் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணியில் தொடக்க வீரர் வசீம் அஹ்மத் 10 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த ஜெயராமன் மற்றும் ஜெகதீசன் கௌஷிக் இணை பொறுப்புடன் விளியாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ஜெயராமன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஜெகதீசன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழ்கக, 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 63 ரன்களை எடுத்திருந்த ஜெயராமனும் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சோனு யாதவ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஜாஃபர் ஜமால், ராஜ்குமார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் சோனு யாதவும் விக்கெட்டை இழக்க, திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சூப்பர் கில்லீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now