
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அந்த தகுதிச்சுற்றில் பங்கேற்கும் அணிகள், ஆட்டங்கள் குறித்த அட்டவணையை ஐசிசி நேற்றைய தினம் வெளியிட்டது. அதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும். இதன் நிறைவில் இரு குரூப்களிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பா் சிக்ஸ்’ நிலைக்கு தகுதிபெறும்.
சூப்பா் சிக்ஸுக்கு வரும் அணிகள், முன்னதாக குரூப் சுற்றில் பெற்ற புள்ளிகளும் கணக்கில் கொள்ளப்படும். ஆனால், அந்த அணிகள் சூப்பா் சிக்ஸுக்கு தகுதிபெறத் தவறிய இதர அணிகளுடனான மோதலில் பெற்ற புள்ளிகள் கணக்கில் கொள்ளப்படாது. சூப்பா் சிக்ஸ் நிலையின் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு அதில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிச்சுற்றில் மோதும். என்றாலும், அந்த இரு அணிகளுமே உலகக் கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதிபெறும்.