
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவர் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் வலுக்க தொடங்கியுள்ளன.