
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரியும், 2 சிக்ஸரும் அடங்கும்.
இதே போன்று அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே 8 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்த்து ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.
இது விராட் கோலியின் 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி 97ஆவது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார். இதன் மூலமாக 500ஆவது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.