Advertisement

பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 27, 2023 • 11:30 AM
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு! (Image Source: Google)
Advertisement

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் இந்திய அணி பிரச்சனையில் சிக்கும் போதெல்லாம், விராட் கோலி இந்திய அணியை மீட்டு வருகிறார்.

இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அத்தனை பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி கடைசி வரை நின்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Trending


இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இதன்பின் அந்த ஓவரை நிறைவு செய்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியை அழைத்தார். இதன்பின் 3 பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து அட்டாக்கில் இருந்து வெளியேறினார். திடீரென விராட் கோலி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்து விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பலரும் லக்னோ சென்றடைந்தனர். இதில் நேற்று இந்திய அணி வீரர்கள் மாலை நேர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு, நட்சத்திர வீரர் விராட் கோலி பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த வாரத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உதவி செய்தார். தற்போது விராட் கோலி பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் சில ஓவர்களையாவது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வீச வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement