
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்தும், முறியடித்தும் வரும் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி 26,532 ரன்களை 54.36 என்ற அபாரமான சராசரியில் குவித்து 80 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
அதே போல ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார். அதனால் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்களுடைய உலவியில் கடந்த 25 வருடங்களில் அதிகமாக மக்களால் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பற்றி கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த 25 வருடத்தில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், முரளிதரன், வார்னே போன்ற உலகின் மற்ற வீரர்களை காட்டிலும் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட வீரராக சாதனை படைத்துள்ளது விராட் கோலியின் கேரியரில் மற்றுமொரு பெருமையாக பார்க்கப்படுகிறது.