
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதனை தீர்மானிக்கும் போட்டியாக நேற்றைய மும்பை - டெல்லி ஆட்டம் அமைந்தது. பெங்களூரு அணி 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கி இருந்தது.
இதனால் 14 புள்ளிகளுடன் இருந்த டெல்லி அணி நல்ல ரன் ரேட் உடன் இருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதேவேளை டெல்லி தோற்றால், பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் சூழலில் போட்டியானது நடைபெற்றது. இதனால் இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் வெற்றி பெற வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக தவமிருந்து காத்திருந்தது பெங்களூரு அணி.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. மும்பை அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், டெல்லி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. அதே வேளையில், பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக ஆர்சிபி தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன.