Advertisement Amazon
Advertisement

உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!

எம்எஸ் தோனி, விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர இந்திய ஜாம்பவான் வீரர்களே 15 கோடிக்கும் குறைவான தொகையில் விளையாடும் போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு தொகை கொடுப்பது சரியல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 20, 2023 • 20:05 PM
உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!
உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்! (Image Source: Google)
Advertisement

துபாயில் கோலாகலமாக நிறைவு பெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை வாங்குவதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகளை கொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது.

Trending


அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார். ஆனால் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்களை இப்படி கோடிகளைக் கொட்டி ஐபிஎல் அணிகள் வாங்கியது இந்திய ரசிகர்களுக்கு உள்ளுக்குள் வலியை கொடுப்பதாகவே அமைந்தது.

இந்நிலையில் எம்எஸ் தோனி, விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர இந்திய ஜாம்பவான் வீரர்களே 15 கோடிக்கும் குறைவான தொகையில் விளையாடும் போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு தொகை கொடுப்பது சரியல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்பிரித் பும்ரா 12 கோடி, எம்எஸ் தோனி 12 கோடி, முகமது ஷமி 5 கோடிக்கு மட்டுமே தங்களுடைய அணிக்காக விளையாடுகிறார்கள். ஆனால் இங்கே கடந்த 8 வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெறும் 26 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவத்தை கொண்ட ஒருவருக்கு 25 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல” என்று கூறினார். 

மேலும் விராட் கோலி இந்த ஏலத்தில் பங்கேற்றால் 42 கோடிக்கு சென்றிருப்பார் என்று தெரிவித்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலத் தொகையின் விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “ஒரு அணிக்கு 200 கோடிகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதில் 150 கோடிகள் இந்திய வீரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். எஞ்சிய 50 கோடிகளை வெளிநாட்டு வீரர்களுக்கு கொடுக்கலாம். ஒருவேளை இன்றைய ஏலத்தில் விராட் கோலி வந்திருந்தால் கண்டிப்பாக 42 கோடிகளுக்கு சென்றிருப்பார்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement