
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி விலகியுள்ளார்.
மேலும், விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது என குறிப்பிட்டிருந்தது. மேலும் விராட் கோலிக்கு மாற்றாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்தது.