ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி குறித்து தனது அதிருப்தியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வெளிப்படுத்தினார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செயத் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 243 ரன்களைக் குவித்து அசத்தியது. பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், அந்த அணியால் 232 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மீதான விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அவர் சிறப்பாக கேப்டனாக செயல்படவில்லை என்றும், அவர் அதற்கு தயாராக இல்லை என்றும் சேவாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி நன்றாக இல்லை என்று நான் உணர்ந்தேன். அவர் இன்னும் அதற்கு முழுமையாக தயாராக இல்லை, முன்முயற்சியுடன் செயல்படவில்லை. சிராஜ் நன்றாக பந்து வீசும்போது, அர்ஷத் கானை பந்துவீச அழைத்தார். மேலும் அவர் பவர்பிளேயில் வீசிய அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்று நினைக்கிறேன்.
அந்த ஓவர் போட்டியை பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாற்றியது. சிராஜ் புதிய பந்தில் நன்றாக பந்து வீசினால், அவரை டெத் ஓவர்களுக்கு வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி செய்ததன் காரணமாக டெத் ஓவர்களில் சிராஜ் ரன்களைக் கொடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். அதனால் ஷுப்மன் கில்லிற்கு பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்த தெரியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்பட்டு வரும் நிலையில், அவரது கேபடன்சி குறித்த விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் கடந்த ஐபிஎல் சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தனது கேப்டன்சி தகுதிகளை மேம்படுத்திக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now