
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 63 ரன்களையும், ஜேஜே ஸ்மட்ஸ் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பியூஷ் சாவ்லா, யுசுஃப் பதான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டூவர்ட் பின்னி 37 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்தியா சாம்பியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.