
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் ரஹ்மனுல்லார் குர்பாஸ் 43 ரன்களைச் சேர்த்தாலும் அதனை அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார். மேற்கொண்டு விளையாடிய வீரர்களில் ரஷித் கானைத் தவிர்த்த மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து வங்கதேச அணி 11.4 ஓவர்களில் இந்த இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழலில் களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் இரண்டாவது ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே ஷாகிப் அல் ஹசனும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 5 பவுண்டரில் ஒரு சிக்ஸர் உள்பட 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.