
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 43 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களையும் சேர்த்து அசத்தினர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும் என ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் தனது விக்கெட்டை இழந்திருந்தார்.