
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிதீஷ் ரெட்டி 40 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.