
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க போட்டியாக இருந்தது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் தான்.
தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணியை தனி ஒரு ஆளாக இருந்து மீட்டார். அவரது ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச்செய்தார். அதன்படி, ஆறாவது வீரராக அந்த அணியில் களமிறங்கிய இவர் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என மொத்தம் 201 ரன்களை குவித்தார்.
இதனால், இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் மேக்ஸ்வெல்லை பாராட்டினார்கள். ரசிகர்களும் அவரை கொண்டாடினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டம் அது. முன்னதாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( பஞ்சாப் கிங்ஸ்), டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளார்.