
டபியூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹீலி மேத்யூஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களையும், அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 34 ரன்களையும், போப் லிட்ச்ஃபீல்ட் 31 ரன்களையும், பார்தி ஃபுல்மாலி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவற, அந்த அணி 19.2 ஓவர்களில் 166 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.