
இந்திய அணி உலகக் கோப்பைக்கு தொடருக்காக தயாராகி வருகிறது. இதில் எந்த அளவுக்கு தயாராகி இருக்கிறது என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக வலிமையான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ் ஆகிய வீரர்கள் மூன்றாவது போட்டிக்கு அணிக்குள் வருகிறார்கள்.
இவர்கள் நால்வருமே நாளைய போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கில், கேஎல் ராகுல், ஷர்துல் தாக்கூர், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். நாளை பும்ரா, சிராஜ் இருவரும் விளையாடலாம். இந்த நிலையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், காயமடைந்து விளையாட முடியாமல் இருக்கும் அக்சர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.
இது மட்டும் இல்லாமல் அஸ்வின் உடன் சேர்த்து அவரைப் போலவே பந்து வீசும் வாஷிங்டன் சுந்தரையும் அணி நிர்வாகம் அணிக்குள் கொண்டு வந்தது. மேலும் இவரை அவசர அவசரமாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்து விளையாடும் 11 பேர் கொண்ட அணியிலும் சேர்த்தது. ஆனால் அவருக்கு அதற்கடுத்து வாய்ப்பு தரவில்லை.