
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, விதர்பா, கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அப்போட்டியில் அவர் சோபிக்க தவறிய நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விடுவிடுக்கப்பட்டார். இருப்பினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.