
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. அதை விட இத்தொடரில் சுமார் 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
முன்னதாக 2023 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவருமை இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருக்கிறார்கள். அதனால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் ஆசிய கோப்பையில் காயமடைந்த அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சுமார் 2 வருடங்கள் கழித்து இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்து சில சாதனைகளை படைத்து தன்னுடைய அனுபவத்தை காட்டி சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அதனால் 2023 உலகக் கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக மட்டும் தேர்வாகியுள்ள அவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய அஸ்வினுக்கு ஒருவேளை அக்சர் படேல் காயத்திலிருந்து குணமடையாமல் வெளியேறும் பட்சத்தில் உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ரோஹித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.