
இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் பேட்டரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக பிசிசிஐ அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் படியும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவருடைய ஓய்வு முடிவானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியாக 9230 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது தலைமையின் கீழ் இந்திய டெஸ்ட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை எட்டியதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது என்பதை எவறாலும் மறுக்க முடியாது.
இந்நிலையில் விராட் கோலியின் இந்த ஓய்வு முடிவு பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், தனது டெஸ்ட் ஓய்வு நாளை நினைவு கூர்ந்துள்ளார் அவருக்காக ஒரு சிறப்புப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.