-lg-mdl.jpg)
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இத்தொடரானது மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதற்கேற்றவகையில் அந்த அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயாள் ஆகியோரை மட்டுமே தக்கவைத்துடன் மற்ற வீரர்களை அணியில் இருந்து கழட்டிவிட்டது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஃபாஃப் டூ பிளெசிஸையும் கழட்டிவிட்டது. இதனையடுத்து ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோரை வாங்கியுள்ளது.
இருப்பினும் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்த நிலையில், தற்போது ரஜத் பட்டிதார் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதாக ஆர்சிபி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜத் பட்டிதாரை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.