
டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அணியை கட்டமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அந்த அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து வீரர்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தும், அவர்களை எந்த வரிசையில் களம் இறங்கினால் சரியாக இருக்கும் என நினைத்தும் அவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போதையை நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். இதில் கேப்டன் என்ற வகையில் முதலாவது தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா இருப்பார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ராகுல் மற்றும் தவான் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை தவானுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.