
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையில், அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் முதல் பந்திலேயே அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் கணக்கை தொடங்கினார். அதன்பின் 12 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.