1st Test, Day 3: மழையால் தடைபட்ட மூன்றாம் நாள் ஆட்டம்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் ஆகியோர் விக்கெட்டை இழந்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஒல்லி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் ஒல்லி போப் 14 பவுண்டரிகளுடன் 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து ஹாரி புரூக் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 99 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜேமி ஸ்மித் 40 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ரன்களில் அல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - சாய் சுதர்ஷன் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சாய் சுதர்ஷன் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களை சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் தனது ஃபார்மை தொடர்கிறார்.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனல் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 47 ரன்களுடனும், ஷுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.