கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!

Updated: Sun, Feb 19 2023 20:20 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.  இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி தேர்வு குறித்து ஒரு குழப்பம் தான் இருந்தது. அதாவது, இதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டைசதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கப்படுவாரா அல்லது கேஎல் ராகுல் இறக்கப்படுவாரா என்பதுதான் அந்த கேள்வி.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவர்தான் துணை கேப்டனும் கூட. அதனால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் முதல் டெஸ்ட்டில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார் ராகுல். இதையடுத்து அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ராகுலை கடுமையாக விமர்சித்தது, முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தான். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியும் அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததே தவறு என்றும், ஷுப்மன் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலுக்கு தொடர் வாய்ப்பளிப்பதாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

அதேபோல் 2ஆவது டெஸ்ட்டிலும் ராகுல் வெறும் 17 மற்றும் ஒரு ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 2022 லிருந்து டெஸ்ட்டில் ராகுலின் சராசரி வெறும் 17.4 ஆகும். 2022லிருந்து டெஸ்ட்டில் ஒரு தொடக்க வீரரின் குறைந்தபட்ச சராசரி இதுதான். அதை சுட்டிக்காட்டி மீண்டும் மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத். ராகுலை 2வது டெஸ்ட்டில் ஆடவைக்கக்கூடாது என்று பலரும் விமர்சித்த நிலையில், ராகுலை நீக்குவதற்கு முன் இன்னுமொரு போட்டியில் வாய்ப்பளிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். 

வெங்கடேஷ் பிரசாத் மட்டுமல்லாது மற்றும் சில முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ராகுல் மீது கடும் அதிருப்தியில் இருப்பதுடன் அவரை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். ராகுல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இந்த சூழலில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ராகுல் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “ராகுல் பேட்டிங் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால் அணி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் திறமையான வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இங்கிலாந்தின் லார்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் ஆகிய மைதானங்களில் சதமடித்தவர் ராகுல். அவரது திறமையின் மீது சந்தேகமேயில்லை. எனவே அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவளிக்கும்” என்றார்.

ராகுல் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “வெளிநாடுகளில் இந்திய அணியின் வெற்றிகரமான ஓபனர் ராகுல். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் சதமடித்திருக்கிறார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்போம். இந்த கடினமான காலத்திலிருந்து மீண்டு வருவதற்கான திறமையும், தரமும், கிளாஸும் அவரிடம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை