பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.  

Advertisement

இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று (நவம்பர் 10) பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்குர்க் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த அணியின் கேப்டன் ஜோஷ் இங்கிலிஸும் 7 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், நட்சத்திர வீரர்களான கூப்பர் கனொலி 7 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 88 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் இணைந்த சீசன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 13 ரன்களில் ஸாம்பாவும், 30 ரன்களில் அபோட்டும் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்பென்சர் ஜான்சன் 12 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா ஷஃபிக் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சைம் அயூப் 42 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் பாபர் ஆசாம் 28 ரன்களையும், முகமது ரிஸ்வான் 30 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் அணியானது 26.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. இதுதவிர்த்து 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News