சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக மிக சிறப்பாக விளையாடினால் ரசிகர்களால் ஹீரோவாக கொண்டாடப்படுவதற்கு நிகராக இந்திய அணியில் இடத்தை பிடிப்பதும் அதை தக்க வைத்துக் கொள்வதும் மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக இப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரர்களுக்கு கூட அடுத்த போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. 

Advertisement

அந்தளவுக்கு போட்டி மிகுந்த இந்திய அணியில் தங்களது இடத்தைப் பிடிக்கப் போராடும் பல வீரர்களுக்கு மத்தியில் டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெர் வீரர் பிரிதிவி ஷா ஒருவராக இருந்து வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் முன்னாள் வீரர் சேவாக் போல அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். 

Advertisement

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த அசத்திய அவரை சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, விரேந்திர சேவாக் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். ஆனால் அந்த பாராட்டையும் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு நாளடைவில் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தவறிய அவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் கடைசியாக கடந்த 2021 ஜூலை மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்த அவர் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் தேர்வுக்குழுவினர் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடந்த ரஞ்சிக் கோப்பையில் முச்சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பிய அவர் உடல் எடையையும் குறைத்துள்ளதால் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் தேர்வானார். 

ஆனாலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் சேர்க்கப்படவில்லை. அதனால் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் அவர் தற்போது நல்ல பார்மில் இருந்தும் ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். தற்போது உச்சகட்ட ஃபார்மில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படும் சுப்மன் கில் போல் வர வேண்டிய பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் என்ற வகையில் சமீபத்திய பேட்டியில் இது பற்றி அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவுக்காக 15 சூப்பர் ஸ்டார் வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறீர்கள் என்றால் என்னை பொறுத்த வரை நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனால் நுணுக்கங்கள் அடிப்படையில் சுப்மன் கில் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோரை நான் மிகவும் விரும்புகிறேன். 

Advertisement

அதே போல் ரிஷப் பந்த் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டுகாக சிறந்த வேலையை செய்துள்ளார். அவர் விரைவில் குணமடைய நான் வாழ்த்துகிறேன். ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் பிரிதிவி ஷா ஏன் தற்போது இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி நீங்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News