இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 278 ரன்கள் எடுத்தது. பின் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஸாக் கிரௌலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை முன்னிலைப் படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 21ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரூட் 109 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 208 ரன்களை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.