இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இர்னடாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து வரும் இந்திய அணி நேற்றையை தினம் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்த கையோடு முதல் நாள் ஆட்டத்தை முடித்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடர்ந்தனர். இதில் இருவரும் தலா 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 18 ரன்னிலும், சர்ஃப்ராஸ் கான் 11 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசிய நிலையில், மறுபக்கம் ஜஸ்பிரித் பும்ரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.