அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.125 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ செயலாலர் ஜெய் ஷா இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவியில், "ஐசிசியின் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணி மிகவும் உறுதியுடன் சிறப்பாக செயல்பட்டது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிசிசிஐயின் பரிசுத்தொகையை கேட்ட ரசிகர்கள் வாயடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.