PAK vs ENG, 3rd Test: மீண்டும் அசத்திய சஜித் கான்; முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

Updated: Thu, Oct 24 2024 19:47 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றள்ள இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 29 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலி தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் பென் டக்கெட் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஒல்லி போப் 3 ரன்களுக்கும், ஜோ ரூட் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  அதன்பின் அரைசதம் கடந்த கையோடு பென் டக்கெட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவர்களைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஹாரி புரூக்கும் 5 ரன்களில் நடையைக் கட்டினார்.

அவர்களைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் இணைந்த ஜேமி ஸ்மித்- கஸ் அட்கின்சன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இப்போட்டியில் அதிர்டியாக விளையாடி வந்த ஜேமி ஸ்மித் தனது ஆரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கஸ் அட்கின்சன் 39 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சதத்தை நெருங்கிய ஜேமி ஸ்மித்தும் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 89 ரன்களில் ஆட்டமிழந்தர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 6 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பறினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 14 ரன்னிலும், சைம் அயூப் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய காம்ரன் குலாம் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இணைந்துள்ள கேப்டன் ஷான் மசூத் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷான் மசூத் மற்றும் சௌத் சகீல் ஆகியோர் தலா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச், கஸ் அட்கின்சன், சோயப் பஷிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 194 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை